என் மலர்
இந்தியா

நமோ பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- இரண்டு நகரங்களுக்கு இடையில் அதிவேக ரெயில் சேவை தொடங்க வழித்தடம்
- சாஹிபாபாத்- துஹாய் டிப்போ இடையே ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மண்டல ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (Regional Rapid Transit System) வழித்தடம் டெல்லி- காசியாபாத்- மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் 160 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், பயணம் செய்வோர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை விரைவாக சென்றடைவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டப் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சாஹிபாபாத்- துஹாய் டெப்போ ஆகியவற்றிற்கு இடையே 17 கி.மீட்டர் தூரத்திற்கு நமோ ரெயில் சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின் நமோ ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சாஹிபாபாத், காசியாபாத், குர்தால், துஹாய், துஹாய் டெப்டோ ஆகிய ஐந்து இடங்களில் அடங்கியுள்ளது.
தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கார்பரேசன் இந்த வழித்தடத்தை அமைத்து வருகிறது. மொத்தம் 82.15 கி.மீ. தூரம் இந்த வழித்தடம் அமைய இருக்கிறது. மொத்த பணிகளும் வருகிற 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் ரெயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகள், ரெயில் பணியாளர்களுடன் உரையாற்றினார். நாளை முதல் பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தலாம்.






