search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் கலெக்டருக்கு 6 வயதில் பாலியல் தொல்லை- குழந்தைகள் விழிப்புணர்வு முகாமில் குமுறல்
    X

    கலெக்டர் திவ்யா எஸ் ஐயர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பெண் கலெக்டருக்கு 6 வயதில் பாலியல் தொல்லை- குழந்தைகள் விழிப்புணர்வு முகாமில் குமுறல்

    • தொடக்க பள்ளியில் படித்தபோது வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன்.
    • பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் திவ்யா எஸ் ஐயர். இவரது கணவர் அருவிக்கரை முன்னாள் எம்.எல்.ஏ. சபரிநாதன். திவ்யா ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் டாக்டருக்கு படித்தவர்.

    இவர் நேற்று பத்தினம்திட்டாவில் நடந்த குழந்தைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தனது குழந்தை பருவம் குறித்த பல உண்மைகளை கூறி கூட்டத்தை அதிர வைத்தார். அவர் பேசியதாவது:-

    தொடக்க பள்ளியில் படித்தபோது வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன். இதனால் வீட்டில் இருந்தவர்கள் என்னை மிகவும் பாசமாக வைத்து கொள்வார்கள். வீட்டுக்கு வருவோரும் என்னிடம் அன்பாக பேசுவார்கள்.

    நான் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தபோது என் வீட்டிற்கு 2 ஆண்கள் வந்தனர். அவர்கள் என்னிடம் அன்புடன் பேசினார்கள்.

    பின்னர் என்னை அவர்கள் அருகில் அமர வைத்தனர். அப்போது அவர்கள் என்னை தொட்டு தொட்டு பேசினார்கள். பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். முதலில் எனக்கு எதுவும் தெரியவில்லை.

    பின்னர் அவர்கள் என் ஆடையை கழற்றும்படி கூறினார்கள். அது எனக்கு சங்கடமாக இருந்தது. எனவே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். இதுபற்றி எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இதனால் நான் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்தேன்.

    பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்தான் இதனை சொல்லி கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு இதுபற்றி தெரிந்திருந்தால் அவர்கள், தன்னிடம் பேசுவோரையும், தவறான எண்ணத்தில் தொடுவோரிடம் இருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும். வண்ணத்து பூச்சிகள் போல் சிறகடித்து பறக்க வேண்டிய பருவத்தில் குழந்தைகள் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க பெரியவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×