

புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்துப் பேசிவருகிறார். அப்படி, 2014-ம் ஆண்டு ஐ.நா.சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவளித்த நிலையில், 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.
சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
அந்தச் சிற்பத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போலவும், Yoga for One Nation One Health என குறிப்பிட்டுள்ளார்.