என் மலர்
இந்தியா

ஆழ்ந்த சமாதியில் மகிழ்ச்சியாக உள்ளேன்- புதிய பதிவை வெளியிட்ட நித்யானந்தா
- வருகிற பவுர்ணமிக்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நித்யானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
புதுடெல்லி:
வழக்குகளுக்கு பயந்து வெளிநாடு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவர் மரணமடைந்ததாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. உடனே நித்யானந்தா அதற்கு மறுப்பு தெரிவித்தார். நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன் என கூறினார்.
அதன்பிறகு அவர் வெளியிட்ட புதிய பதிவுகளில் உடல்நிலை தொடர்பான பல்வேறு தகவல்களை கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
பரமசிவனின் ஆசிகள், அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன்.
மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலை பகிர்ந்து கொள்வேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நித்யானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.






