என் மலர்
இந்தியா

உடலை அடக்கம் செய்து சோகத்தில் இருந்த தாய்.. உறவினர் வீட்டில் இருந்து உயிருடன் வந்த மகன்
- ருஷோத்தமின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு உறவினர்கள் அங்கு வந்தனர்.
- தனது மகன் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
சத்தீஸ்கரில் நவம்பர் 1 ஆம் தேதி சூரஜ்பூர் மாவட்டத்தின் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது.
அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தமின் குடும்பத்தினர், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என காவல்துறையை அணுகியிருந்த நிலையில் அவர்களுக்கு அந்த உடல் காண்பிக்கப்பட்டது.
குடும்பத்தினர், இறந்தவர் புருஷோத்தம் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர், புருஷோத்தமின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள், புருஷோதமை சந்தர்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.
இறுதியில் புருஷோத்தம் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 4 ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். புருஷோத்தமின் தாய் மான்குன்வர், தனது மகன் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
புருஷோத்தமின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் பிற உடைமைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை அந்த நபர் நீரில் மூழ்கி இறந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.






