என் மலர்
இந்தியா

பி.எஸ்.பி. கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது பொய்யான செய்தி: மாயாவதி
- உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டி என மாயாவதி திட்டவட்டம்.
- ஆனால் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக செய்திகள் பரவி வருவதாக மாயாவதி குற்றச்சாட்டு.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, 2027 உத்தர பிரதேச தேர்தலில் தன்னுடைய கட்சி தனியாகத்தான் போட்டியிடும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்தான் தேர்தலை சந்திக்கும் எனச் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அந்த செய்து முற்றிலும் பொய்யானது என மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது:-
இது முற்றிலும் தவறான, பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட செய்திகள். பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே இந்த விவாதம் பரப்பப்படுகிறது.
இதுபோன்ற விவாதங்களுக்கு மத்தியில் ஊடகங்களின் சில பிரிவுகள் ஏதாவது ஒரு சாக்குப்போக்கைச் சொல்லி வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற வாதத்தைப் பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது.
இதுபோன்ற யூக செய்திகளில் ஈடுபடுவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும்.
கட்சி நிறுவனர் கன்ஷி ராமின் நினைவு தினமான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி, பகுஜன் சமாஜ் கட்சி தனியாகத்தான் போட்டியிடும் என்பதை தெளிவாகத் தெரிவித்துவிட்டேன். அதன்பின் அதில் எந்த குழப்பமும் இல்லை.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.






