

கேரளாவில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்ததால் 2 இடங்களில் இன்று நடக்க இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள விழிஞ்சம் வார்டை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஜஸ்டின் பிரான்சிஸ்(வயது60) நேற்று முன்தினம் இரவு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட விழிஞ்சம் வார்டுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரியான துணை ஆட்சியர் ஆல்பிரட் அறிவித்தார்.
இதேபோல் மலப்புரம் மாவட்டம் மூத்தேடம் பஞ்சாயத்து 7-வது வார்டில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஹசீனா(49) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மயங்கிவிழுந்து இறந்தார். இதனால் அவர் போட்டியிட்ட வார்டிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.