என் மலர்
இந்தியா

பெங்களுருவில் சித்தராமையாவின் பேனருக்கு அவரது ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
கர்நாடக முதல்-மந்திரியாக தேர்வு: சித்தராமையா ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
- கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.
- சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி திணறி வருகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் போட்டி இருந்து வருகிறது.
இருவரும் பிடிவாதமாக இருப்பதால், கட்சி மேலிடம் திணறி வருகிறது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்க அவர் கூறியதாக தகவல் வெளியானது.
சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்க உள்ளனர்.
இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பெங்களூருவிலும், அவரது சொந்த ஊரான மைசூரு மாவட்டம் சித்தராமய்யனகுந்தியிலும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் முன்பு குவிந்த தொண்டர்கள், அவரது உருவப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும், இனிப்பு ஊட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






