பி.பி.சி. அலுவலகங்களில் 60 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு

பி.பி.சி. அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.
பி.பி.சி. அலுவலகங்களில் 60 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
Published on

புதுடெல்லி:

லண்டனை மையமாகக் கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப் படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதல் மந்திரியாக இருந்தார். இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மத்திய அரசு இந்த ஆவணப் படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையே டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின. இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012-ம் ஆண்டின் வரவு-செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 60 மணி நேர ஆய்வு பணி இன்று இரவு 10:45 மணிக்கு நிறைவடைந்தது. நாளையும் சோதனை தொடரும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com