

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் மாணிக் ரெட்டி. அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் அஞ்சிரெட்டி, நாராயண் ரெட்டி. 3 பேரும் வேறு ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தங்களது ஊருக்கு திரும்பிய 3 பேரும் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 1967-ம் ஆண்டு பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அன்று முதல் இன்று வரை சுமார் 58 ஆண்டுகளாக பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அப்போதில் இருந்து அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பல தலைமுறை மக்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்ளும் பெரியவர்கள் 4.30 மணி முதல் 6 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பெண்களும், 8 மணி முதல் 9.30 மணி வரை வாலிபர்களும் பாராயணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கோலாட்டம் தபேலா ஆர்மோனியம் வாசித்தல் உள்ளிட்ட கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.
இந்த கிராமத்தில் மொத்தம் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பகவத் கீதை பாராயணம் செய்வதால் கிராம மக்களில் ஒருவருக்கு கூட மது அருந்துதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட எந்த வித பழக்கங்களும் இல்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.