கோமா நிலையில் இருக்கும் கணவருக்கு மனைவியே பாதுகாவலர் - டெல்லி ஐகோர்ட்

மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
கோமா நிலையில் இருக்கும் கணவருக்கு மனைவியே பாதுகாவலர் - டெல்லி ஐகோர்ட்
Published on

டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், தொடர்ச்சியாக சுய நினைவற்ற நிலையில்(கோமா) உள்ளார். கணவரின் மருத்துவத் தேவைகளையும் செலவுகளையும் நிர்வகிப்பதற்காக, அவரது அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கணவருக்கு பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து வந்தார்.

நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், 'மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். மருத்துவ அறிக்கையின் படி, அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது நலனுக்காக, ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது அவசியமாகிறது.

தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும் பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

எனவே, மனுதாரரின் கணவர் மருத்துவ கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த கோர்ட்டு நியமிக்கிறது' என கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com