search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு
    X

    சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு

    • நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
    • 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. லோனாக் ஏரி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.

    இந்த பேய் மழையால் அங்குள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த பெரு வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து சுங்தாங் அணையை சென்றடைந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக அணையின் கீழ் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 22 ராணுவ வீரர்கள் உள்பட 103 பேர் அடித்து செல்லப்பட்டனர்.

    இந்த வெள்ளப்பெருக்கால் பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அந்த நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்தன.

    சிக்கிமில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    22 ராணுவ வீரர்கள் உள்பட 103 பேரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    மழை, வெள்ளத்தால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணமும், வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.2000 வழங்கப்படும் என்றும் முதல்வர் பிரேம் சிங் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×