

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக நிறுவனம் உடனடியாக அறிவித்து, நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க நிர்வாக இயக்குநர் ராகுல் பாடியாவை இடைக்கால தலைவராக நியமித்துள்ளது.
இண்டிகோ கடந்த 3 மாதங்களாக மிகப்பெரிய அளவில் விமான போக்குவரத்து இடையூறை சந்தித்தது. இதனால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளானார்கள். டிஜிசிஏ இண்டிகோ நிறுவனத்திற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
எல்பர்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இண்டிகோவின் சிஇஓ-வாக பதவி ஏற்றார். இண்டிகோ கடந்த டிசம்பர் மாதம் தனது சேவைகளில் கடுமையான குளறுபடிகளை சந்தித்தது, விமானிகள் பணி நேரம் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் இந்த நிலை ஏற்பட்டது. 100-க்கும் அதிகமான விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டது. இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.