

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கும் அங்கிருந்து கேரளாவுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர். இன்று காலை இந்த விமானம் கேரளாவில் பயணித்தபோது தரையிறங்கும் கியரில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டறிந்த விமானி, விமான நிலைய ஆணையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து அந்த விமானத்தை அவசரமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது.
விமானம் அவசரமாக தரையிறங்குவதை தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அதன்பிறகு காலை 9.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதில் பயணித்த 160 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.
ஜெட்டா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்த ஒரு வெளிநாட்டு பொருளால் விமானத்தின் டயரில் சேதம் ஏற்பட்டதாகவும், இது கண்டுபிடிக்கப்பட்டதும் விமானத்தை அவசரமாக கொச்சியில் தரை இறக்கியதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.