search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விண்கற்கள்
    X
    விண்கற்கள்

    வானில் தோன்றிய திடீர் ஒளியால் மராட்டியம், மத்திய பிரதேசத்தில் பீதி

    மராட்டியம், மத்திய பிரதேச மாநிலங்களில் சில இடங்களில் வானத்தில் ஏற்பட்ட திடீர் ஒளியால் பெரும் பீதி ஏற்பட்டது.
    மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங்களில் நேற்று இரவு வானில் அசாதாரண நிகழ்வை காண முடிந்தது. வேகமாக நகரும் ஒளி வெள்ளத்தை மக்கள் பார்த்தார்கள்.

    இதே போல மத்திய பிரதேச மாநிலம் ஜபுவா, பர்வானி மாவட்டங்களிலும் வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ள காட்சியை காண முடிந்தது. வானத்தில் திடீர் என தோன்றிய இந்த ஒளியை பார்த்ததும் மக்கள் பீதி அடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

    ஏதோ ஒரு நாட்டின் செயற்கைகோள் தற்செயலாக விழுந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விழுந்து இருக்கலாம். இது விண்கல பொழிவோ அல்லது தீப்பந்தமோ தெரியவில்லை. ராக்கெட்டாக கூட இருக்கலாம் என்று மக்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    வானத்தில் வேகமாக பயணித்த இந்த திடீர் ஒளியை மக்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது பிரகாசமான கோடுகள் உருவாவது வழக்கம். அற்புதமான இந்த காட்சிகள் பெரும்பாலும் கேமராவில் சிக்குவது கிடையாது.

    ‘ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ என்று அழைக்கப்படும் விண்கற்கள் பாறை போன்ற பொருட்களாகும். அவை பூமியின் வளி மண்டலத்தில் மிக அதிவேகத்தில் நுழைகின்றன. விண்வெளியில் ஒரு தூசி நிறைந்த பகுதியை கடக்கும்போது அதிவேகமாக அதாவது வினாடிக்கு 30 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் நுழைகின்றன. அப்போது விண்கல் மழை என்று அழைக்கப்படும் ஒளிக்கோடுகள் உருவாகுகின்றன.

    இந்த காட்சிகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வானிலையாளர்கள் இதுகுறித்து தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×