search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மனைவி மீது கணவர் வழக்கு

    இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதால் மனைவி மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலம் ராம்நகரை சேர்ந்தவர் இஷான்மியா. இவரது மனைவி ரபியா ‌ஷம்சி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இடையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரபியா ‌ஷம்சி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் தொடர்ந்து இருந்தார்.

    கடந்த மாதம் 24-ந்தேதி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.

    அப்போது ரபியா ‌ஷம்சியும் மற்றும் அவரது தாய் வீட்டு குடும்பத்தினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்தியாவை அவமதிக்கும் வகையில் கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள்.

    இந்த காட்சிகளை படம் பிடித்து வாட்ஸ்-அப், ஸ்டேட்டசிலும் ரபியா ‌ஷம்சி வெளியிட்டார். இது கணவர் இஷான் மியா கவனத்துக்கு வந்தது. அவர் இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தார்.

    அதையடுத்து ரபியா ‌ஷம்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் தகவல் தொடர்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு அங்கித் மிட்டல் கூறும்போது, ‘‘அவர்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதோடு, இந்தியாவை அவமதிக்கும் வகையில் கோ‌ஷங்களை எழுப்பி தவறாக செயல்பட்டதால், அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது’’ என்று கூறினார்.
    Next Story
    ×