search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்துபோன தாய் குரங்கையும் அந்த குரங்கை அடக்கம் செய்த போது குட்டி குரங்கு
    X
    இறந்துபோன தாய் குரங்கையும் அந்த குரங்கை அடக்கம் செய்த போது குட்டி குரங்கு

    மின்சாரம் தாக்கி பலியான தாய் குரங்குடன் குட்டி பாசப்போராட்டம்

    மின்சாரம் தாக்கி பலியான தாய் குரங்குடன் குட்டி குரங்கு நடத்திய பாசப்போராட்ட காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
    பெலகாவி:

    கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே உள்ளது கொன்னூர் கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்திற்குள் குரங்குகள் புகுந்து சுற்றித்திரிந்து வருகின்றன. அதுபோல் ஒரு தாய் குரங்கு, குட்டியுடன் சுற்றித்திரிந்து வந்தது. இந்த தாய் குரங்கும், குட்டியும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களிடம் நெருங்கி பழகி வந்தன.

    இந்த நிலையில் நேற்று தாய் குரங்கு மின்கம்பத்தில் ஏறி அங்கும் இங்கும் ஓடி விளையாடியது. அதனுடன் குட்டி குரங்கும் விளையாடியபடி இருந்தது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக தாய் குரங்கை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் உடல் கருகி அது சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தது.

    இதை பார்த்த குட்டி குரங்கு, தாய் குரங்கு இறந்தது தெரியாமல் அதன் அருகில் சென்று அதை எழுப்ப முயன்றது. ஆனால் அது அசைவற்று கிடப்பதை பார்த்த குட்டி குரங்கு கண்ணீர்விட்ட படி சுற்றி சுற்றி வந்தது. மேலும் அந்த குட்டி குரங்கு, தனது தாயிடம் பால் குடித்தபடி இருந்தது. தாயுடன் குட்டி குரங்கு நடத்திய பாசப்போராட்ட காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    இந்த காட்சிகளை பார்த்த கிராம மக்கள், இறந்துபோன தாய் குரங்கிற்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் தாய் குரங்கை மீட்டு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி, குங்குமமிட்டு, பூவைத்து இறுதிச்சடங்கு நடத்தினர். அப்போது குட்டி குரங்கு, தாய் குரங்கை கெட்டியாக பிடித்தப்படி, பால் குடித்தப்படி இருந்தது.

    தாயிடம் இருந்து குட்டியை பிரிக்க கிராமத்தினர் நீண்ட நேரமாக போராடினர். பின்னர் புட்டிபால் கொண்டு வந்து குட்டி குரங்கிற்கு கொடுத்தனர். பின்னர் லாவகமாக குட்டி குரங்கை கிராம மக்கள் மீட்டனர். அதையடுத்து தாய் குரங்கிற்கு இறுதிச்சடங்கு நடத்தி அதே இடத்தில் குழி தோண்டி அடக்கம் செய்தனர்.

    இந்த காட்சிகளை குட்டி குரங்கு பார்த்து கண்ணீர்விட்டபடி இருந்தது. குட்டி குரங்கை கிராம மக்கள் தற்போது பராமரித்து வருகிறார்கள். இருப்பினும் தாயை பிரிந்த குட்டி குரங்கு அழுதபடி இருந்து வருகிறது. இது கிராமத்தினரை மட்டுமின்றி காண்போரின்நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
    Next Story
    ×