என் மலர்
செய்திகள்

விபத்தில் உருக்குலைந்த பேருந்து
வேலைக்காக பேருந்தில் குஜராத் சென்றபோது விபத்து- ஒடிசா தொழிலாளர்கள் 7 பேர் பலி
ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத்திற்கு பேருந்தில் சென்றபோது, சத்தீஷ்கர் மாநிலத்தில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு பேருந்தில் சென்றனர். தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, இன்று அதிகாலை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே சென்றபோது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சிதைந்துபோனது. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதற்காக உடனடியாக ராய்ப்பூர் செல்லும்படி அமைச்சர் சுசந்தா சிங்கிற்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
Next Story