search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதை பரிசோதனையில் சிக்கிய விமானிக்கு வடக்கு பிராந்திய ஏர் இந்தியா இயக்குனர் பதவி
    X

    போதை பரிசோதனையில் சிக்கிய விமானிக்கு வடக்கு பிராந்திய ஏர் இந்தியா இயக்குனர் பதவி

    குடி போதையில் விமானம் ஓட்டியதற்காக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட விமானிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு பிராந்திய இயக்குனர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #AirIndia #ArvindKathpalia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரவிந்த் கத்பாலியா மூத்த விமானியாக மட்டுமில்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார்.

    அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

    இதேபோல் 11-11-2018 அன்றும் டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தை ஓட்டச் சென்றபோது நடத்திய பரிசோதனையிலும் போதையில் இருந்ததாக இவர் சிக்கினார்.

    இதன் விளைவாக விமானிகளுக்கான விதி எண் 24-ஐ மீறி நடந்துகொண்ட குற்றத்துக்காக அரவிந்த் கத்பாலியா அடுத்த மூன்றாண்டுகளுக்கு விமானம் ஓட்ட தடை விதித்தும், அவரது விமானி லைசென்சை அதுவரை ரத்து செய்தும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.



    இதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனர் பதவியில் இருந்தும் இன்று அவர் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அரவிந்த் கத்பாலியா ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு பிராந்திய இயக்குனராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.  

    ஏர் இந்தியாவின் வடக்கு பிராந்திய இயக்குனர் பங்கஜ் குமார் 30-4-2019 அன்றுடன் பணிஓய்வு பெறுவதால் 1-5-2019 முதல் அந்த பதவியில் அரவிந்த் கத்பாலியா நியமிக்கப்படுகிறார் என அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடிபோதையில் விமானம் ஓட்டி தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதற்கு இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பலமான அரசியல் தொடர்பும், செல்வாக்கும் உள்ள நபர்கள் எத்தகையை குற்றங்களில் இருந்தும் தப்பித்துக் கொள்வார்கள் என்பது தற்போது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

    சட்டத்தை மீறியதற்காக குற்றப்பத்திரிகை நிலுவையில் உள்ள ஒருநபர் மற்ற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க முடியாது. மேலும், முன்னர் அரவிந்த் கத்பாலியா மீதான போலீஸ் விசாரணையின்போது அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த நியமனத்தை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #preflight #alcoholtest #AirIndia #ArvindKathpalia #AirIndiaRegionalDirector 
    Next Story
    ×