search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் கண்டக்டரை தீயணைப்பு படை வீரர்கள் கீழே இறக்கிய காட்சி
    X
    மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் கண்டக்டரை தீயணைப்பு படை வீரர்கள் கீழே இறக்கிய காட்சி

    கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் ஆள்குறைப்பு - மரத்தில் ஏறி 2 பெண் கண்டக்டர்கள் தற்கொலை மிரட்டல்

    கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க வலியுறுத்தி மரத்தில் ஏறி 2 பெண் கண்டக்டர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது.

    கேரள அரசு சார்பில் இயக்கப்படும் பஸ்களில் ஏராளமான டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். கேரள அரசு பஸ்களில் பெண்களும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்கள்.

    சமீபத்தில் போக்குவரத்து கழகத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. இதனால் பலர் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட கண்டக்டர்களும், டிரைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    தங்களுக்கு மீண்டும் டிரைவர், கண்டக்டர் பணி வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று அவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்றும் கேரள அரசு தலைமைச் செயலகம் முன்பு கண்டக்டர்களும், டிரைவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 2 பெண் கண்டக்டர்கள் உள்பட 4 பேர் அந்த பகுதியில் நின்ற பெரிய ஆலமரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களுக்கு மீண்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்குவதாக உறுதி அளிக்காவிட்டால் மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வோம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்குச் சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. மரத்தில் இருந்து இறங்கவும் மறுத்து விட்டனர்.

    இதைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மரத்தில் ஏறி போராடி அவர்களை மீட்டனர்.

    போராட்டம் நடத்திய 2 பெண் கண்டக்டர்கள் உள்பட 4 பேரையும் கயிறு கட்டி மரத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×