search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுஷ்மான் பாரத் - தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்கண்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    X

    ஆயுஷ்மான் பாரத் - தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்கண்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    நாடு முழுவதும் 10 கோடி மக்கள் பயன்பெறும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி ஜார்கண்டில் இன்று தொடங்கி வைத்தார். #AyushmanBharat #PMModi
    ராஞ்சி:

    இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. 

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். 

    உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டம் ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 

    2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதாரம் மற்றும் சாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மருத்துவக் காப்பீட்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதில் பணம் செலுத்தி மருத்துவம் பெற்றுக் கொண்டு, பிறகு கட்டண பில்களை செலுத்தி, பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி கிடையாது. 

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு மருத்துவமனைகள், மாநில அரசின் மருத்துவ மனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சுமார் 15 ஆயிரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள். 

    ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1027 சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரையிலான காப்பீட்டினையும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டினையும் மற்றும் 8 வகையான உயர்நிலை சிகிச்சைகளுக்கு மைய நிதியும் ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கான செலவினையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

    மத்திய அரசின் திட்டத்துடன் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டினையும் ஒருங்கிணைத்து செயல்படுவத்துவதன் மூலம் தமிழகத்திலுள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமார் 2.85 கோடி நபர்கள் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெறமுடியும். இதற்குரிய பயனாளிகள் ஏற்கனவே முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கலாம். 

    விடுபட்டவர்களையும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து புதிதாக காப்பீடு அட்டை வழங்கப்படும். 

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கும் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டினை விரிவுபடுத்தி உறுதி செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஆகையால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலுள்ள அனைத்து பயனாளிகள், அவர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதிப் பெற்றவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடு உயர்த்தப்பட்டு வழங்கப்படும். 

    மேலும் உயர்நிலை சிகிச்சைகளான காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, செவி புல மூளை தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் தமிழ்நாடு அரசின் மைய நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தகுதி பெறாத ஆனால், மத்திய அரசு திட்டத்திற்கு அடிப்படையான பெருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளி விவரப்படி தகுதியுள்ள நபர்களுக்கும் இனி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும். #AyushmanBharat #PMModi
    Next Story
    ×