search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வர்கலை பாபநாசம் பகுதியில் தேவசம் போர்டு அலுவலகம் அருகே கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ள காட்சி.
    X
    வர்கலை பாபநாசம் பகுதியில் தேவசம் போர்டு அலுவலகம் அருகே கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ள காட்சி.

    கேரளாவில் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையம் மேலும் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருவனந்தபுரம், பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பொழிவு காணப்படுகிறது. பலத்த மழை காரணமாக எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து மழை நீடிப்பதால் இன்றும் அந்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மேலும் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மழை காரணமாக பல இடங்களில் பெரிய மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. இதனால் மின் கம்பங்கள் உடைந்ததால் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. மின் ஊழியர்களும், தீயணைப்பு படையினரும் மீட்புபணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கேரளாவின் மலையோர பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக பாபநாசம் பகுதியில் தேவசம் போர்டு அலுவலகம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. மலை கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதனால் கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மலை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கோவளம், விழிஞ்ஞம், சிறையின்கீழ், பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்து உள்ளனர். #KeralaRain
    Next Story
    ×