search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
    X

    லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

    லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #LokayuktaBill #SupremeCourt

    புதுடெல்லி:

    மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள், மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க பாராளுமன்றத்தில் லோக் பால் மசோதாவும், லோக் ஆயுக்தா மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    இதை பின்பற்றி மாநிலங்கள் சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

    தமிழகம், காஷ்மீர், புதுவை உள்பட 11 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஜூலை 10-ந்தேதி வரை (இன்று) கெடு விதித்தனர்.

    லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதாவை தயாரித்து அதை நேற்று சட்டசபையில் நிறைவேற்றியது. இதுபற்றிய பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

    இன்று இந்த வழக்கு சுப்ரீம கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் புதுவை அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் லோக்ஆயுக்தா வரைவு மசோதா தயாராகி வருவதாகவும், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் சட்டம் நிறை வேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. #LokayuktaBill #SupremeCourt

    Next Story
    ×