search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் சீரழிந்ததில் பா.ஜ.க.வுக்கும் சமபங்கு உண்டு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    காஷ்மீர் சீரழிந்ததில் பா.ஜ.க.வுக்கும் சமபங்கு உண்டு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

    காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துப் போனதில் ஆட்சியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கும் சமபங்கு உண்டு என அம்மாநில முன்னாள் முதல் மந்திரி குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார். #Congress #BJPDumpsPDP #BJPPDP
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.

    காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. இன்று அறிவித்தது.

    மாநிலத்தில் பெருகிவரும் பயங்ரவாதத்தை கட்டுப்படுத்தி, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாநில அரசிடம் உள்ள அதிகாரம் அனைத்தும் கவர்னரிடம் அளிக்கப்பட வேண்டும். அங்கு பயங்கரவாதத்தை ஒழித்த பிறகுதான் அரசியல் ரீதியான செயல்பாடுகளை தொடர முடியும் என பா.ஜ.க. பொது செயலாளர் ராம் மாதவ் குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மெகபூபா முப்தி தீர்மானித்துள்ளார்.


    இந்நிலையில், காஷ்மீரில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துப் போனதில் ஆட்சியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கும் சமபங்கு உண்டு என அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும், பாராளுமன்ற மேல்சபை காங்கிரஸ் கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், ‘ஜம்மு - காஷ்மீர் நிலவரத்தில் தனது பொறுப்புகளை துறந்துவிட்டு பா.ஜ.க. ஓடிப்போக கூடாது. ஜம்மு - காஷ்மீர் நிலவரத்துக்கு பா.ஜ.க.வும் சமமாக பொறுப்பேற்க வேண்டும். உண்மையில், இந்த ஒட்டுமொத்த நிலவரத்துக்கும் மத்திய அரசுதான் முதல் குற்றவாளி’ என்று குறிப்பிட்டார்.

    தற்போது நடந்தது நன்மையாகவே நடந்துள்ளது. காஷ்மீர் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைவார்கள். கடந்த மூன்றாண்டுகளாக ஏராளமான பொதுமக்களும் ராணுவத்தினரும் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரை சீரழித்துவிட்டு தற்போது அரசில் இருந்து பா.ஜ.க. வெளியேறியுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

    பி.டி.பி. கட்சியுடன் இணைந்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். #Congress #BJPresponsible #Kashmirsituation #BJPDumpsPDP #BJPPDP #MehboobaMufti
    Next Story
    ×