search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள தேர்தல் வன்முறை எதிரொலி -  568 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு
    X

    மேற்கு வங்காள தேர்தல் வன்முறை எதிரொலி - 568 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு

    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பரவலாக வன்முறை சம்பவங்களால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 568 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. #Panchayatelections #Repoll
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் துவங்குவதற்கு முன்பிருந்தே மாநிலத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவின்போதும் வன்முறை தொடர்ந்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின. மாநிலம் முழுதும் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை தொடர்பாக சுயேட்சை வேட்பாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்களை அடுக்கினர். இதைத்தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட  வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    அதன் அடிப்படையில், ஹூக்ளி மாவட்டத்தில் 10 வாக்குச்சாவடிகள், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 28 வாக்குச்சாவடிகள், கூச் பெஹார் மாவட்டத்தில் 52 வாக்குச்சாவடிகள், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள், நாடியா மாவட்டத்தில் 60 வாக்குச்சாவடிகள், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 59 வாக்குச்சாவடிகள், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 26 வாக்குச்சாவடிகள், மால்டா மாவட்டத்தில் 55 வாக்குச்சாவடிகள், உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் 73 வாக்குச்சாவடிகள்  என மொத்தம் 568 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள்  நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Panchayatelections #Repoll
    Next Story
    ×