search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி மலைப்பாதை செக்போஸ்ட்
    X
    திருப்பதி மலைப்பாதை செக்போஸ்ட்

    திருப்பதி மலைப்பாதை மூடும் நேரம் 1 மணி நேரம் குறைப்பு

    கோடைவிடுமுறையையொட்டி திருப்பதியில் மலைப்பாதைகள் மூடப்படும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
    திருமலை:

    திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். அதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைப்பாதை மற்றும் திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் முதல் மலைப்பாதை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூடப்படுகிறது. இதனால் ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஜூன் மாதம் வரை மூடும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மலைப்பாதைகளை மூட முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் திருப்பதியில் அறை எடுத்து தங்கி அதிகாலை திருமலைக்கு வந்து சேவையில் கலந்து கொள்ள முடியும் என்றார்.

    திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி, திங்கட்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டத்தில் ரூ.3.27 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

    ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 68,610 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 25,863 பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். நேற்றைய நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 6 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 2 காத்திருப்பு அறைகளிலும் ஏழுமலையானை தரிசிக்கக் காத்திருந்தனர். தர்ம தரிசன பக்தர்களுக்கு 4 மணி நேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 2 மணி நேரமும் ஆனது.

    Next Story
    ×