search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியல் நிலவரம் பற்றி ராகுல்காந்தி ஆலோசனை
    X

    தமிழக அரசியல் நிலவரம் பற்றி ராகுல்காந்தி ஆலோசனை

    தமிழக அரசியல் நிலவரம் பற்றி ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    தமிழக அரசியல் நிலவரம் பற்றி ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரஸ் ஆதரவை பெற முயற்சி?

    தமிழகத்தில் ஆட்சி அமைக்க சசிகலா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவு அளித்து வந்த கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நேரத்தில் நெருக்கடி ஏற்படலாம் என்று சசிகலா கருதுவதாக கூறப்படுகிறது.

    இதனால் அவரச உதவியாக அவர் டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்தின் மூலம் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக டெல்லிக்கு வருமாறு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்றனர். நேற்று காலை அவர்கள் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தனர்.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி அனந்தன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் ராகுல்காந்தி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல்காந்தி எங்களிடம் கேட்டார். நாங்கள் விரிவாக எடுத்துக்கூறினோம். இது தொடர்பாக எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. ராகுல்காந்தியின் நிலைப்பாட்டை நான் சொல்ல முடியாது.

    சட்டத்துக்கு உட்பட்டு, பாராளுமன்ற சட்டமன்ற விதிமுறைகள், முன்னுதாரணத்துக்கு உட்பட்டு தமிழக கவர்னர் உடனடியாக செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் அரசு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதை கவர்னர் உடனடியாக ஏற்படுத்தவேண்டும். கவர்னர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் முடிவு எடுத்த பிறகுதான் அது சரியா, தவறா? என்று கருத்து சொல்ல முடியும்.

    பா.ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எந்த வித அஸ்திவாரமும் கிடையாது. அது தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கிறது. ஜனாதிபதி தேர்தல், வர இருக்கிற தேர்தல்களை மனதில் கொண்டு, வட மாநிலங்களில் எப்படி அரசியல் விளையாட்டு விளையாடியதோ அதைப்போல தமிழ்நாட்டிலும் விளையாட மோடி அரசு நினைக்கிறது. அது தவறு.

    ஜல்லிக்கட்டு மற்றும் பொதுப்பிரச்சினைகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்தார். ஆனால் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையிலான அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவரை சந்திக்க முடியவில்லை. இப்படி பிரித்தாளுகிற நிலையை மேற்கொண்டு ஆதாயம் பெற பா.ஜனதா முயற்சிக்கிறது. தமிழகத்தில் பின்புற வாசல் வழியாக கால்பதிக்க முயற்சி செய்கிறது. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களில் காங்கிரஸ் தலையிடாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×