search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது - 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
    X

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது - 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

    மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்றம் நாளை கூடுகிறது. 1-ந் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பெரும் பாலும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும்.

    மாதத்தின் கடைசி நாளான 28-ந் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆங்கிலேயர் காலத்திய இந்த நடைமுறையை மாற்றியமைத்து, தற்போது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது.

    அதன்படி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.

    இந்த ஆண்டு முதல் முறையாக ரெயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, அது மத்திய பட்ஜெட்டுடன் இணைக் கப்படுகிறது.

    பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டின் (2017- 2018) முதல் நாளிலேயே (ஏப்ரல் 1-ந் தேதி) தொடங்குவதற்கு வசதியாக மத்திய அரசு முன்கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

    பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மோடி அரசுக்கு வழக்கம்போல் சவால் மிகுந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம் பல்வேறு மறைமுக சலுகைகளை இந்த மாநிலங்களுக்கு அறிவிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

    இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதை, தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தள்ளிவைக்கவேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, பட்ஜெட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சலுகைகள் எதையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதால் ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரி மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை முன்பு போல் பா.ஜனதா அரசால் பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் 5 மாநில வாக்காளர்களுக்கு தெரிவிக்கவேண்டிய தகவல்களை பாராளுமன்றத்தில் வைக்க முயற்சிக்கும் என்பதால் இரு தரப்பிலுமே மோதல் போக்கு காணப்படும் என்ற நிலைதான் உள்ளது.

    குறிப்பாக நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி விதிப்பை வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை தடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளலாம்.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகுந்த கூச்சல், குழப்பத்துடன் நடந்தது. இதனால் அப்போது பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் போனது. தற்போது, பிரதமர் அளித்த 50 நாள் கால அவகாசம் முடிந்துவிட்டதால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஏற்பட்ட விளைவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும்.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஊழல் புகார்களில் சி.பி.ஐ.யால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது உள்ளிட்ட பிரச்சினைகளில் திரிணாமுல் காங்கிரஸ் மிகக் கடுமையாக மத்திய அரசை எதிர்க்கும் நிலையும் காணப் படுகிறது.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விவாதத்துக்கு தயார் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபோதிலும், இது தொடர்பாக நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்க்கட்சிகள் முன்னிலைப்படுத்தும் என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவது சந்தேகம் என்று கருதப்படுகிறது.

    இதுபற்றி ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரான கே.சி.தியாகி கூறுகையில், “இந்த தொடரிலும் பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. முட்டுக்கட்டைகள் அவ்வளவு எளிதில் நீங்கி விடாது. தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்றுவிட்டாலும் கூட ஜனநாயக ரீதியாக பட்ஜெட்டை தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யக் கூடாது” என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. முகமது சலீம் கூறும்போது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்த கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும். இதில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பலன் இருந்ததா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வற்புறுத்துவோம். ஏனெனில் இப்பிரச்சினையில் கொஞ்சம் கூட வெளிப் படைத்தன்மை இல்லை” என்று குறிப்பிட்டார்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அக்கட்சியிடம் இருந்தும் மத்திய அரசு நெருக்கடியை சந்திக்கலாம்.

    மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த வன்முறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஆகியவை பற்றியும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி மசோதா, வாடகைத்தாய் (கட்டுப்பாடு) சட்டம், சம்பளம் தொடர்பான சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் அனுமதிக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 
    Next Story
    ×