search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கமாட்டோம்: விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு
    X

    ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கமாட்டோம்: விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக் கட்டு சட்டத்தை எதிர்க்க மாட்டோம் என்று விலங்குகள் நல வாரியம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.

    தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

    இந்த அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு போராட்டங்களை நடத்தியதால், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த வாரம் சனிக்கிழமை அவசர சட்டம் பிறப்பித்தது.

    அதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வந்தன.

    இதனால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற முடிவு செய்தது.

    இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்து தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி, இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அங்கமான இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் அதன் உறுப்பினர் வக்கீல் அஞ்சலி சர்மா, ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இடைக்கால மனு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்ப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்திய விலங்குகள் நல வாரியம் எடுத்து உள்ளது

    எனவே, இடைக்கால மனுவை வாபஸ் பெறுமாறு கோரி வக்கீல் அஞ்சலி சர்மாவுக்கு இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எம்.ரவிக்குமார் கடந்த 24-ந் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் இடைக்கால மனுவை வாபஸ் பெற முடியாது என்றும், மனு தாக்கல் செய்ய தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் அஞ்சலி சர்மா தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.எஸ்.நேகி உறுப்பினர் அஞ்சலி சர்மாவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால மனு தாக்கல் செய்ய முன்பு தவறுதலாக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த அனுமதியை தற்போது வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறி உள்ளார்.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக ‘கியூபா’, ‘பிபாயோ’, ‘அனிமல் ஈக்வாலிட்டி’ ஆகிய விலங்குகள் நல அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகின்றன.

    இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் அஞ்சலி சர்மா தாக்கல் செய்த இடைக்கால மனு விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை. 
    Next Story
    ×