search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: விமான நிலைய ஓடுபாதையில் ஜெகன்மோகன் ரெட்டி திடீர் தர்ணா
    X

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: விமான நிலைய ஓடுபாதையில் ஜெகன்மோகன் ரெட்டி திடீர் தர்ணா

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.

    நகரி:

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து போராடி வருகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடியதால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்பட்டது.

    அதே போல ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக போராட வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.


    இதையடுத்து நேற்று ஆந்திரா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மெழுகுவர்த்தி பேரணியில் தான் கலந்து கொள்ளப்போவதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

    இந்த நிலையில் மெழுகு வர்த்தி பேரணியில் கலந்து கொள்வதற்காக ஜெகன் மோகன் ரெட்டி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சென்றார்.

    விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே உடனே திரும்பிச் செல்லுமாறு கூறினார்கள்.

    இதனால் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம் அடைந்தார். விமான நிலையம் ஓடுபாதையில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரம் அவர் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.


    பின்னர் அவரிடம் போலீசார் சமரசம் பேசி ஐதராபாத் சென்ற விமானத்தில் அவரை குண்டு கட்டாக ஏற்றி திருப்பி அனுப்பினார்கள்.

    ஐதராபாத் சென்ற ஜெகன் மோகன் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பெற மாட்டார். நாங்கள் போராடி பெற நினைத்தாலும் அதையும் தடுக்கிறார். விமான நிலையத்தில் இருந்து என்னை வெளியே வரக்கூட அனுமதிக்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் தடுத்து நிறுத்தி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×