search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமாஜ்வாடி கட்சியில் மோதல்: சைக்கிள் சின்னம் யாருக்கு? என்பது பற்றி தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்கிறது
    X

    சமாஜ்வாடி கட்சியில் மோதல்: சைக்கிள் சின்னம் யாருக்கு? என்பது பற்றி தேர்தல் கமிஷன் இன்று அறிவிக்கிறது

    சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங்-அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது பற்றி தேர்தல் கமிஷன் இன்று தனது முடிவை அறிவிக்கிறது.
    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங்-அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து, சைக்கிள் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது பற்றி தேர்தல் கமிஷன் இன்று தனது முடிவை அறிவிக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சியில், அதன் தலைவர் முலாயம்சிங்குக்கும், அவருடைய மகனும், முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வேட்பாளர் தேர்வில் அகிலேஷ் யாதவின் விருப்பம் நிறைவேற்றப்படாததால், அவர் கடந்த 1-ந் தேதி, கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டி, தன்னை கட்சியின் தேசிய தலைவராக அறிவித்துக்கொண்டார்.

    ஆனால், அந்த கூட்டம் செல்லாது என்று முலாயம்சிங் கூறினார்.

    இருதரப்பினரும், கட்சியும், கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் கமிஷனை அணுகி முறையிட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து உள்ளிட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

    அந்த ஆதாரங்களை பரிசீலித்த தேர்தல் கமிஷன், இருதரப்பினரிடம் நேற்று முன்தினம் தனது விசாரணையை முடித்தது. தீர்ப்பை ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், தேர்தல் கமிஷன் இன்று தனது தீர்ப்பை அளிக்கும் என்று தெரிகிறது. ஒருவேளை தவறினால் கூட, நாளை காலைக்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் நாளைதான் வேட்புமனு தாக்கல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

    சைக்கிள் சின்னம், முலாயம்சிங் தரப்புக்கா? அகிலேஷ் யாதவ் தரப்புக்கா? என்று தேர்தல் கமிஷன் தீர்ப்பில் தெரிய வரும். அல்லது இருதரப்புக்கும் ஒதுக்காமல், சின்னத்தை முடக்கிவைப்பதற்கும் தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது.

    ஆனால், எந்த முடிவை அறிவித்தாலும், அதற்கேற்றபடி தேர்தலை சந்திக்க இருதரப்பினரும் தயாராக உள்ளனர்.

    மேலும், இந்த தீர்ப்பை பிற முக்கிய கட்சிகளான பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன.

    சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தேர்தல் கமிஷனின் முடிவுக்காகவே அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, இந்த தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார். 
    Next Story
    ×