search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சுதானந்தன்
    X
    அச்சுதானந்தன்

    மணி மந்திரி பதவியில் நீடிப்பது கட்சிக்கு அவமானம்: அச்சுதானந்தன்

    கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணி மந்திரி பதவியில் நீடிப்பது கட்சிக்கு அவமானம் என்று முன்னாள் முதல்-மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் மணி. கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மணி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார்.

    கட்சி வளர்ச்சிக்காக கொலை கூட செய்ய தயங்க மாட்டேன் என்று இவர் பேசிய பேச்சு சொந்த கட்சிக்காரர்களேயே அதிர வைத்தது.

    இளைஞர் காங்கிரசை சேர்ந்த அஞ்சோயேரி கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் மந்திரி மணி மீது உள்ளது. இந்த நிலையில் அஞ்சோயேரி கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் இருந்து மணியை விடுவிக்க முடியாது என்று கோர்ட்டு கூறியது.

    இதனால் மந்திரி பதவியில் இருந்து மணி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் பதவி விலக முடியாது என்று மணி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கட்சி மேலிடத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கம்யூனிஸ்டு ஆட்சியில் கொலை குற்றச்சாட்டு கூறப்பட்டவர்கள் இதுவரை மந்திரி பதவியில் இருந்தது இல்லை. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மந்திரி பதவியில் நீடிப்பது கட்சிக்கு அவமானம்.

    இது போன்ற நேரங்களில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் யார் என்று முகத்தைப் பார்க்காமல் கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    மந்திரி மணி

    சொந்த கட்சிக்குள்ளேயே மந்திரி மணிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் இந்த பிரச்சனை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மந்திரி மணி இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது அச்சுதானந்தன் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. கட்சி மேலிடம் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

    மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றார்.
    Next Story
    ×