search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர் பிரச்சினை: இந்தியா-இலங்கை அதிகாரிகள் 31-ந்தேதி பேச்சுவார்த்தை
    X

    தமிழக மீனவர் பிரச்சினை: இந்தியா-இலங்கை அதிகாரிகள் 31-ந்தேதி பேச்சுவார்த்தை

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திவரும் பிரச்சினை குறித்து இந்தியா, இலங்கை அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் 31-ந்தேதி நடக்கிறது.
    புதுடெல்லி:

    தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதும், தாக்கப்படு வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு சுமுக முடிவு காண பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்துள்ளன.

    கடந்த மாதம் இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு மீன்வளத் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை டெல்லியில் 31-ந்தேதி நடக்கிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் சொரூப் கூறியதாவது:-

    இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினை குறித்து நவம்பர் 5-ந்தேதி டெல்லியில் நடந்த இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அடுத்ததாக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

    துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 31-ந்தேதி (சனிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ந்தேதி கொழும்பில் இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஒரு சுமுக முடிவு எடுக்கப்பட்டு, அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின்போது அது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×