என் மலர்
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் வங்கியில் பணம் எடுப்பதில் மோதல்: துப்பாக்கி சூடு
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம புவந்த்சாகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் ஆஹார் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் எடுப்பதற்காக நேற்று காலை முதலே பொதுமக்கள் நீணட வரிசையில் காத்திருந்தனர்.
காலை 10 மணிக்குப்பிறகு ரிசர்வ்வங்கியில் இருந்து வங்கிக்கு பணம் வந்தது. பின்னர் அந்த பணத்தை பொது மக்களுக்கு பிரித்து கொடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வங்கியில் குறைந்த அளவே பணம் வந்ததாக தெரிகிறது. ஆனால் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே வங்கியில் நின்ற பொதுமக்களில் பாதி பேருக்கு மட்டுமே பணம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. வங்கியில் அதிக கூட்டம் காணப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே வங்கியில் பணம் எடுப்பதற்காக சாந்தி என்ற பெண் வந்தார். நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றதால் தனக்கு பணம் கிடைக்காது என்றுகருதிய சாந்தி வரிசையில் நிற்காமல் முந்திச்செல்ல முயன்றார். இதனால் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்களில் சிலர் சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கிருந்து சென்ற சாந்தி 5 வாலிபர்களை அழைத்து வந்தார். அவர்கள் சாந்தியிடம் வாக்குவாதம் செய்தவர்களை தாக்கினர். பதிலுக்கு வரிசையில் நின்ற பொதுமக்கள் சாந்தியுடன் வந்த வாலிபர்களை தாக்கினார்கள் . இதனால் அங்கு பலத்த மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு ஜஸ்வீர் சிங் மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு துப்பாக்கியை காட்டி மிரட்டினார். ஆனாலும் மோதல் நீடித்தது.
இதையடுத்து போலீஸ் ஏட்டு ஜஸ்வீர்சிங் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுமதி பெறாமல் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் ஏட்டு ஜஸ்வீர் சிங்கை பணிநீக்கம் செய்தனர்.