search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் 7 நாட்களாக முடங்கியதில் ரூ.22 கோடி இழப்பு
    X

    பாராளுமன்றம் 7 நாட்களாக முடங்கியதில் ரூ.22 கோடி இழப்பு

    ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியால் கடந்த ஏழு நாட்களில் பாராளுமன்றத்தின் 80 சதவீத பணிகள் முடங்கின. இதனால் மக்களின் வரிப் பணம் சுமார் ரூ.22 கோடி வீணாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. டிசம்பர் 16-ந்தேதிவரை 22 நாட்கள் பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத் தொடரில் 9 மசோதாக்களை அறிமுகப்படுத்தவும், நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது. 2 மசோதாக்களை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் கடந்த 1 வாரமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை கண்டித்து பிரச்சினை எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக கேள்வி நேரம் முழுமையாக நடைபெறுவதில்லை. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா மீது விவாதம் நடத்தி அதை நிறைவேற்ற முடிவதில்லை.

    சட்டத்திருத்த மசோதாக்களும் நிலுவையில் வைக்கப்படுகின்றன. மசோதாக்களை வாபஸ் பெறவும் முடிவதில்லை. அமளி காரணமாக பாராளுமன்ற கூட்டத் தொடர் அடிக்கடி ஒத்திவைக்கப்படுகிறது. மத்திய அரசால் அமைக்கப்படும் குழுக்களின் பரிந்துரைகளையும் ஆராய்ந்து ஏற்க முடியாமல் போய்விடுகிறது.

    மேலும் பொது மக்களின் வரிப்பணமும் வீணாகி விடுகிறது. பாராளுமன்ற செயல்பாட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. மக்களவைக்கு ரூ.623.29 கோடியும், மாநிலங்களவைக்கு ரூ.376.19 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு அவைகளும் ஆண்டுக்கு 100 நாட்கள் கூடுகின்றன. விடுமுறை நாட்கள் தவிர்த்து இரு அவைகளும் 70 நாட்கள் செயல்படுகின்றன.

    ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் வரிப் பணம் வீணாகிறது. இது தொடர்பாக பாராளுமன்ற கணக்கு பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட 1 மணி நேரத்துக்கு ரூ.35 லட்சம் செலவாகிறது. கடந்த 16-ந்தேதி முதல் 25-ந் தேதிவரை 7 நாட்களில் பாராளுமன்றத்தின் 80 சதவீத பணிகள் முடங்கின. இதனால் மக்களின் வரிப் பணம் சுமார் ரூ.22 கோடி வீணாகியுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×