search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோர கடையில் அமர்ந்து அறுந்த செருப்பை தைத்துச் சென்ற ஸ்மிரிதி இரானி
    X

    சாலையோர கடையில் அமர்ந்து அறுந்த செருப்பை தைத்துச் சென்ற ஸ்மிரிதி இரானி

    கோவைக்கு விமானத்தில் வந்து இறங்கியபோது மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் செருப்பு அறுந்தது. அவர் தொழிலாளியை தேடிச் சென்று அதை தைத்துக்கொண்டார். அப்போது சாலையோரத்தில் இருந்த அந்த கடையில் அமர்ந்து இருந்த அவரைப் பார்த்த மக்கள் வியந்தனர்.
    கோவை:

    மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் நேற்று பகலில் கோவை வந்தார். விமானத்தில் இருந்து இறங்கியபோது அவரது வலது காலில் அணிந்து இருந்த செருப்பு அறுந்தது. ஆனாலும் அவர் சமாளித்தபடி நடந்துவந்து காரில் ஏறினார்.

    அங்கு இருந்து ஈஷா யோகா மையத்துக்கு ஸ்மிரிதி இரானி காரில் சென்றார். அவருடன் பாரதிய ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனும் சென்றார். அப்போது தனது செருப்பு அறுந்துவிட்டது, சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி இருந்தால் காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார். அவரும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளி இருக்கிறாரா? என்று பார்த்துக்கொண்டே வந்தார்.

    பேரூர் பட்டீசுவரன் கோவில் அருகே சென்றபோது, நடைபாதை ஓரத்தில் ஒரு தொழிலாளி செருப்பு தைத்துக்கொண்டு இருப்பதை கவனித்த ஸ்மிரிதி இரானி காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய அவர் வானதி சீனிவாசனுடன் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்றார். அந்த தொழிலாளிக்கு அவர் மத்திய மந்திரி என தெரியாது.

    வானதி சீனிவாசன் கூறிய பின்னரும், அந்த தொழிலாளி எந்தவித பதற்றமும் இல்லாமல் தன்னுடைய தொழிலில் கவனமுடன் இருந்தார். ஸ்மிரிதி இரானி கடையில் இருந்த ஒரு திண்டில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய செருப்பை தைக்கும்படி கொடுத்தார். அவரும் செருப்பை தைத்து கொடுத்துவிட்டு கூலியாக ரூ.10 கொடுக்கும்படி கூறினார்.

    10 ரூபாய் சில்லரை இல்லாததால் ஸ்மிரிதி இரானி 100 ரூபாயை தொழிலாளியிடம் கொடுத்தார். உடனே அந்த தொழிலாளி அப்படியானால் மற்றொரு செருப்பையும் கொடுங்கள், அந்த செருப்பும் அறுந்துவிடாமல் இருக்க கூடுதலாக தையல்போட்டு கொடுப்பதாக கூறி அதையும் தைத்துக் கொடுத்தார். தொழிலாளியின் நேர்மையை பாராட்டிவிட்டு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் ஒரு மத்திய மந்திரி ரோட்டோரத்தில் இருந்த கடையில் அமர்ந்து தொழிலாளியிடம் செருப்பு தைத்துக்கொண்டிருப்பதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும், பொதுமக்களும் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

    வானதி சீனிவாசன் கூறும்போது, ‘புதிய செருப்பு வாங்கிக்கொள்ளலாம் என்று நான் கூறியதற்கு, வேண்டாம் இதையே தைத்து அணிந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார்’ என்றார்.

    அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் பெயர் கணேசன் (வயது 39). 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்துவருவதாகவும், தனது கடைக்கு ஒரு மத்திய மந்திரி வருவது இதுதான் முதல்முறை என்றும் கூறினார்.
    Next Story
    ×