என் மலர்
செய்திகள்

பா.ஜனதாவினர் நிலம் வாங்கி முதலீடு செய்து விட்டார்கள்: ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு
பாட்னா:
ஐக்கிய தனதா தளம் செய்தி தொடர்பாளர்கள் சஞ்சய் சிங் நீரஜ்குமார் ஆகியோர் பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பீகாரில் பா.ஜனதாவினர் நிலங்கள், வீடுகள், மனைகளை வாங்கி முதலீடு செய்து இருக்கிறார்கள்.
குறிப்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திலீப்குமார், ஜெய்ஸ்வால், சஞ்சீவ், சவுரசியா, லால்பாபு பிரசாத் ஆகியோர் தங்களது சொந்த மாவட்டங்களில் பிளாட்டுகள் வாங்கி இருக்கிறார்கள்.
பா.ஜனதா மேலிட தலைவர்களின் உத்தரவின் பேரிலேயே தாங்கள் இந்த பிளாட்டுகளை வாங்குவதாக கட்டுமான நிறுவனங்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
கருப்பு பணத்தை மாற்றுவதற்காகவே நிலங்களில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இதில் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்களது உத்தரவின் பேரிலேயே இந்த நில முதலீடுகள் நடைபெற்று இருக்கிறது.
செப்டம்பர் மாதம் 6-ந் தேதி லக்கி சாராய் என்ற இடத்தில் பா.ஜனதாவினர் ரூ.4.7 கோடிக்கு நிலம் வாங்கி உள்ளனர். மதுபானி, மாதேபுராவில் செப்டம்பர் 14-ந் தேதியும், கதிகாரில் செப்டம்பர் 16-ந் தேதியும், கிஷன் கஞ்ச், ஆர்வால் ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந் தேதியும் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு அவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து இருப்பதால்தான் இவ்வாறு முதலீடு செய்து இருக்கிறார்கள்.
நிலம் வாங்க கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதே போல் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. பாய் பிரேந்திராவும், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு முன்கூட்டியே தெரிந்து விட்டதால் தான் பா.ஜனதாவினர் கருப்பு பணத்தை மாற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார்.