search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினை: மோடி மீது பா. ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா பாய்ச்சல்
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினை: மோடி மீது பா. ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா பாய்ச்சல்

    பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா ஆரம்ப காலத்தில் இருந்தே பிரதமர் மோடிக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக மோடியை அவர் கடுமையான விமர்சித்துள்ளார்.
    பாட்னா:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்டது சரியா? தவறா? என ஒரு கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 90 சதவீதம் மக்கள் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டு சரி என கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

    இதை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி கருத்து வெளியிட்டிருந்தார். அதில், ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதை ஒட்டுமொத்த நாடும் பாராட்டுகிறது என்று கூறியிருந்தார்.

    இது சம்பந்தமாக சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், முட்டாள் உலகத்தில் இருந்து கொண்டு இதுபோல கதைகளை உருவாக்கி வெளியிடுவதை நிறுத்துங்கள். இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை மக்கள் யாரும் ரசிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

    பின்னர் மேலும் ஒரு கருத்தை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். அதில், மோடி அரசு ரூபாய் நோட்டு ஒழிப்பு பிரச்சினை ஏழை மக்களுக்கு ஆதரவாக செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறது. ஆனால், ஏழைகள், வாக்காளர்கள், ஆதரவாளர்கள், பெண்களும் படும் கஷ்டங்களை கண்டிப்பாக நீங்கள் உணர வேண்டும். நமது தாய்மார்களும், சகோதரிகளும் தங்களுடைய அவசர தேவைக்காக சேர்த்து வைத்த பணமும் கருப்பு பணமும் ஒன்றானது அல்ல என்று கூறியிருந்தார்.

    பா.ஜனதா கட்சியின் எம்.பி.யான சத்ருகன் சின்கா தனது கட்சி அரசு பற்றியே இப்படி விமர்சித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சத்ருகன் சின்கா கருத்து வெளிவந்ததும் பீகார் மாநில பா.ஜனதா தலைவர் மங்கள்பாண்டே தனது டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்து வெளியிட்டார். அதில், சத்ருகன்சின்கா அவர்களே! நீங்கள் ஏன் காங்கிரசுக்கு மறைமுகமாக ஆதரவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஊழல் பேர்வழிகள் மீதும், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீதும் அக்கறை இருந்தால் நீங்கள் காங்கிரசில் சென்று சேர்ந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

    சத்ருகன் சின்கா அத்வானியின் ஆதரவாளர் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே அவர் மோடியை விமர்சித்து வந்தார். பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன் அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வற்புறுத்தி வந்தார். இந்த பிரச்சினையில் இருந்தே அவர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    Next Story
    ×