search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் செலுத்தப்பட்ட கருப்பு பணத்துக்கு 60 சதவீத வரி
    X

    வங்கியில் செலுத்தப்பட்ட கருப்பு பணத்துக்கு 60 சதவீத வரி

    வங்கியில் செலுத்தப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு சுமார் 60 சதவீத வரி விதிப்பது பற்றி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    வங்கியில் செலுத்தப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு சுமார் 60 சதவீத வரி விதிப்பது பற்றி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.

    ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் அவரவர் கணக்கில் செலுத்தலாம் என்று கூறியது. இதை பயன்படுத்தி, ஏராளமானோர், கணக்கில் காட்டாமல் வைத்திருந்த கருப்பு பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்தினர்.

    இதனால், ரூ.2½ லட்சத்துக்கு மேல் போடப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்யப்போவதாக வருமான வரித்துறை அறிவித்தது. வருமானத்துக்கு பொருந்தாத பணமாக இருந்தால், அதற்கு வருமான வரியுடன் 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்தது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சிலர் பணத்தை தீவைத்து எரித்தனர்.

    இதுவரை பணம் இல்லாமல் இருந்த ‘ஜன்தன் யோஜனா‘ கணக்குகளில் மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி போடப்பட்டதும் மத்திய அரசை கவலை கொள்ள வைத்தது. அது, மற்றவர்களின் பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே, இவை பற்றியெல்லாம் விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று இரவு அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, ரூ.2½ லட்சத்துக்கு மேல் யார் யார் வங்கி கணக்கில் செலுத்தினார்களோ, அந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணமாக இருந்தால், அதற்கு சுமார் 60 சதவீத வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே இந்த திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    பொதுவாக, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது, முக்கியமான கொள்கை முடிவுகள், வெளியே அறிவிக்கப்படுவது இல்லை. எனவே, 60 சதவீத வரி விதிப்பு பற்றி முடிவு ஏதும் எடுக்கப்பட்டதா என்று தெரிவிக்கப்படவில்லை.

    வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபற்றி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய புதிய டெபாசிட் திட்டத்தையோ, கடன் பத்திர திட்டத்தையோ மத்திய அரசு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×