search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் அரண்மனையில் ரூ.650 கோடி செலவில் ரெட்டி மகள் திருமணம்
    X

    பெங்களூர் அரண்மனையில் ரூ.650 கோடி செலவில் ரெட்டி மகள் திருமணம்

    பெங்களூர் அரண்மனையில் ரூ.650 கோடி செலவில் நடைபெறும் ரெட்டி மகள் திருமணத்தை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவர் ஜனார்த்தன ரெட்டி.

    பிரபல சுரங்க அதிபரான இவர் 2008-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் சுற்றுலாத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

    ஜனார்த்தன ரெட்டி 30-க்கும் மேற்பட்ட சுரங்க மோசடி வழக்கில் சிக்கி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சட்டத்துக்கு விரோதமாக சுரங்கம் அமைத்து ரூ.50 ஆயிரம் கோடி வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்து இருப்பதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருந்தது.

    இந்த நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவை சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    பிராமணி-தென் ஆப்பிரிக்க வைர சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டி திருமணம் பெங்களூரில் உள்ள அரண்மனையில் இன்று நடக்கிறது.

    இதற்காக திருப்பதியில் இருந்து 8 வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இந்த திருமணம் மொத்தம் ரூ.650 கோடி செலவில் மிகவும் ஆடம்பரமாக நடக்கிறது.

    இந்த திருமணத்துக்காக ரூ.6 கோடி செலவில் எல்.சி.டி வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

    இதற்காக 36 ஏக்கர் பரப்பளவில் விஜய நகர பேரரசரின் அரண்மனை போன்று பிரமாண்ட செட் போடப்பட்டு உள்ளது. இதேபோல பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள், சொந்த ஊர் ஆகியவற்றிலும் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டன.

    திருமணத்துக்காக பெரிய அளவிலான கேமிராக்கள், எல்.சி.டி. திரைகள், 3 ஆயிரம் பாதுகாவலர்கள் என ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு இருந்தது.

    மத்திய, மாநில அமைச்சர்கள், சினிமா துறையை சேர்ந்த முன்னணி கலைஞர்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு பிரமுகர்களுக்காக நட்சத்திர விடுதிகளில் 1,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    பெல்லாரி, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து விருந்தினர்களை அழைத்து வர 700 ஆம்னி பஸ்கள், 1000 டாக்சிகள், 15 ஹெலிபேடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

    அரண்மனை வடிவிலான செட்டை சுற்றி 25 வெள்ளை குதிரைகள் நிறுத்தப்பட்டன. பிரேசில் நாட்டில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். திருமண ஊர்வலத்தின் போது அழகிகள் சம்பா நடனமாடுகிறார்கள்.

    நேற்று மாலையில் இருந்தே திருமண சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் ஜனார்த்தன ரெட்டியின் குடும்ப நண்பர்கள் பங்கேற்றனர்.

    ரூ.650 கோடியில் நடைபெறும் இந்த திருமணத்தை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த திருமணத்தில் கருப்பு பணம் புழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×