search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர்கள் குவித்த ரூ.12 லட்சம் கோடி குப்பை ஆகிப்போனது: அமித்ஷா
    X

    காங்கிரஸ் தலைவர்கள் குவித்த ரூ.12 லட்சம் கோடி குப்பை ஆகிப்போனது: அமித்ஷா

    பிரதமர் மோடியின் நடவடிக்கையால் காங்கிரஸ் தலைவர்கள் குவித்து வைத்திருந்த ரூ.12 லட்சம் கோடி குப்பை ஆகிப்போனது என்று அமித்ஷா கூறினார்.
    ஆமதாபாத்:

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் பரூச் நகரில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் நேற்று பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.

    அவர் பேசும்போது கூறியதாவது:-

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் வீட்டு ஊழல், விமானங்கள் வாங்குவதில் முறைகேடு என்று ஒவ்வொரு நாளும் ஒரு ஊழல் நடந்தது. இதுபோன்ற மிகப்பெரிய ஊழல்கள் மூலம் 3 மடங்கு மத்திய பட்ஜெட்டுக்கு இணையான ரூ.12 லட்சம் கோடியை காங்கிரஸ் தலைவர்கள் குவித்தனர்.

    இந்த பணத்தை காங்கிரசார் தங்களுடைய வீடுகள், குடோன்கள், நண்பர்களின் வீடுகளில் மிகவும் பத்திரமாக பதுக்கி வைத்து இருந்தனர்.

    அவர்கள் குவித்த அந்த பணம் எல்லாம் பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி எடுத்த அதிரடி நடவடிக்கையால் குப்பை போல் ஆகிவிட்டது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அவர்களின் முகங்கள் வாடிப்போய்விட்டன.

    வெள்ளத்தில் அனைத்துமே அடித்துச் செல்வது போன்ற ஒரு நிலைமை இது. தற்போது காங்கிரஸ் தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, முலாயம் சிங் போன்றோர் இந்த வெள்ளத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கைகோர்த்து உள்ளனர். எங்களிடம் கருப்பு பணம் கிடையாது. அதை வைத்திருப்பவர்கள்தான் கவலைப்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 4 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றது பற்றியும் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். ரூ.4 ஆயிரத்தை மாற்றுவதற்காக ராகுல்காந்தி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் வங்கிக்கு சென்றார் என்று கேலியாக குறிப்பிட்டார்.

    இன்று (புதன்கிழமை) தொடங்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கையில் எடுக்க இருக்கும் நிலையில் அமித்ஷா காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×