search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவு: பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
    X

    காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவு: பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

    தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் மதுக்கடைகளை திறக்க தடை விதித்துள்ளனர்.
    பெங்களூரு:

    தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் மதுக்கடைகளை திறக்க தடை விதித்துள்ளனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து கடந்த 12-ந் தேதி பெங்களூருவில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்து தமிழக லாரிகள், பஸ்கள், பிற வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து, பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

    இந்த நிலையில், பெங்களூரு புறநகர் அத்திப்பள்ளியில் கர்நாடக-தமிழக எல்லை பகுதியை மூடும் போராட்டத்தில் நேற்று கன்னட அமைப்பினர் ஈடுபட்டதால், பெங்களூரு முழுவதும் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், காவிரி மேற்பார்வை குழு தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக மண்டியாவில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதற்கிடையே கே.ஆர்.எஸ். அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும், துணை ராணுவப்படையினரும் அணையைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பெங்களூரு நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப்படை, அதிவிரைவு படை, மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், பெங்களூரு நகர் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை மதுபானக்கடைகள் திறக்கவும், மதுபானங்கள் விற்பனை செய்யவும் போலீசார் தடை விதித்து உள்ளனர். ‘பப்’களிலும் மதுபானங்கள் விற்க அனுமதி இல்லை. பெங்களூரு நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ராணுவ கேன்டீன்களில் மட்டும் மதுபானங்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×