search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
    X

    அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் பிரிவினைவாதிகள் உச்சகட்ட போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதால் மாநிலத்தில் சமீபத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் தீவிரவாத தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 9-ந்தேதி முதல் அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த வன்முறை மற்றும் அதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களால் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    பல்வேறு வன்முறை சம்பவங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்பட சுமார் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்,

    இந்த வன்முறையால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் சமீபத்தில் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. எனினும் அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இதனால் 50 நாட்களுக்கும் மேலாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், அங்கு அமைதியை கட்டமைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 4-ம் தேதி அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் ஸ்ரீநகர் சென்று அங்கு பிரிவினைவாதிகள் தவிர அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதன் பின்னர் அங்கு நிலைமை ஓரளவுக்கு சீரடைந்ததால் சுமார் இரண்டு மாதமாக மாநிலத்தின் பல இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மெல்ல,மெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதக் குழுக்கள் வெள்ளிக்கிழமை ‘ஜும்மா’ தொழுகைக்கு பின்னர் அடிக்கடி பாகிஸ்தான் கொடிகளை காட்டியும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்புவது வாடிக்கையாகி விட்டபடியால், இன்று தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பெருநகரங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பல வட்டாரங்களின் காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசாருடன் ராணுவத்தினரும், ஊர்க்காவல் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×