search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    வ.உ.சி.யின் நன்றி மறவாமை
    X

    வ.உ.சி.யின் நன்றி மறவாமை

    • வறுமையின் பிடியில் வாடிய வ.உ.சி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார்.
    • மளிகை கடை ஆரம்பித்தார். நஷ்டம். நண்பர்கள் விலகிப் போனார்கள்.

    "ஒரு மகிழ்ச்சியான செய்தி" என்று சொல்லியபடியே நண்பரின் வீட்டுக்குள் நுழைந்தார் வ. உ. சி.

    நண்பர் ஆர்வத்துடன், "அப்படியா, என்ன செய்தி அது? உடனே சொல்லுங்கள் பிள்ளைவாள்."

    "எனக்கு மகன் பிறந்திருக்கிறான்"

    என்று சொல்லிவிட்டு நண்பர் வீட்டு திண்ணையில் அமர்ந்தார் வ.உ.சி.

    "ரொம்ப சந்தோஷம் பிள்ளைவாள். தாயும் சேயும் நலம்தானே?"

    "மிக்க நலம். அடுத்து உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி."

    "என்ன ?"

    "இப்போது பிறந்திருக்கும் என் பையனுக்கு ஒரு வெள்ளைக்காரரின் பெயரை வைக்கப் போகிறேன்."

    நண்பர் திகைத்துப் போனார்.

    "என்ன சொல்கிறீர்கள் பிள்ளைவாள் ?"

    "ஆமாம். ஒரு ஆங்கிலேயரின் பெயரைத்தான் என் மகனுக்கு நான் வைக்கப் போகிறேன்."

    நண்பர் எதுவும் புரியாமல், "பிள்ளைவாள். நம் வாழ்நாள் எல்லாம் நாம் பாடுபட்டது ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு விரட்டத்தானே?"

    'ஆமாம்' என்று சொல்லியபடியே தலை குனிந்து அமர்ந்திருந்தார் வ.உ.சி.

    "அப்படி இருக்கும்போது எந்த வெள்ளைக்காரர்களுக்கு எதிராக போராடினோமோ, அந்த வெள்ளைக்காரரின் பெயரை எப்படி உங்கள் மகனுக்கு..."

    வ. உ. சி. கண்கள் கலங்க தலை நிமிர்ந்து பார்த்தார்.

    "அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது."

    ஆம். மிக மிக முக்கியமான காரணம் ஒன்று இருந்தது.

    சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ. உ. சி ஆரம்பித்த கப்பல் கம்பெனி, எதிர்பார்த்த அளவு வருமானம் இன்றி, ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு, கடனில் மூழ்கிப் போனது.

    வ. உ.சி.யின் குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியானது.

    வறுமையின் பிடியில் வாடிய வ.உ.சி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார்.

    மளிகை கடை ஆரம்பித்தார். நஷ்டம். நண்பர்கள் விலகிப் போனார்கள்.

    மண்ணெண்ணெய் வியாபாரம் ஆரம்பித்தார். அதிலும் நஷ்டம். சொந்தக்காரர்கள் காணாமல் போனார்கள்.

    தெரிந்தவர்கள் ஓரிருவரை தவிர எவரும் பெரிதாக உதவி செய்யவில்லை.

    அடுத்து எந்த திசையில் செல்வது, என்ன தொழில் செய்வதென்று புரியாமல் திக்கி திணறிக் கொண்டிருந்தார் வ. உ. சி.

    அடிப்படையில் வ. உ. சி ஒரு வழக்கறிஞர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவருடைய வழக்கறிஞர் உரிமத்தை ஆங்கிலேய அரசு ரத்து செய்து வைத்திருந்தது.

    ஆனால் ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் வ.உ.சி. மீது இரக்கம் கொண்டிருந்தார்.

    அவர்தான் நீதிபதி வாலஸ்.

    வ. உ. சி. ஒரு நல்ல மனிதர் என்பதை நன்கு அறிந்திருந்தார் வாலஸ்.

    ஜாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து மனித நேயத்தோடு சிந்தித்தார்.

    வ. உ.சிக்கு உதவி செய்வதற்காக அவர் இழந்திருந்த வக்கீல் உரிமையை, வாதாடி போராடி மீட்டுக் கொடுத்தார் நீதிபதி வாலஸ். இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் கண்கலங்கி கைகூப்பி தொழுதார் வ. உ. சி !

    நீதிபதி வாலஸ் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக் கடனாக, தான் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார்.

    தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு".

    செக்கிழுத்ததால் மட்டும் அவர் நம் நினைவில் நிற்கவில்லை. செய்நன்றி மறவாத அந்த நல்ல குணத்தால்தான் சரித்திர புகழ் பெற்று விளங்குகிறார் வ. உ. சி.

    -ஜான்துரை ஆசீர்செல்லையா

    Next Story
    ×