search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களை தடுத்ததாக செந்தில் பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனரிடம் அதிமுக புகார்
    X

    வாக்காளர்களை தடுத்ததாக செந்தில் பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனரிடம் அதிமுக புகார்

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை தடுத்ததாக செந்தில் பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. செய்தி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாபு முருகவேல் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் தொட்டிக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டுப்போட விடாமல் தடுத்துள்ளார். இது நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும்.

     


    எனவே செந்தில்பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டுப்போடவிடாமல் தடுக்கப்பட்ட வாக்காளர்களை மீட்டு அவர்கள் வாக்களிக்க செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து வினியோகிக்க உள்ளனர்.

    இதற்காக அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் பொட்டலங்கள் வினியோகிக்க உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

    எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஆர்.கே.நகர் பாணியில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து அதனை வாக்காளர்களுக்கு விநியோகித்துள்ளார். டோக்கன் முறையில் அதனை விநியோகித்துள்ள அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து விட்டு, மாலையில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதற்காக அவர் இந்த மாதிரி செயல்படுகிறார். இந்த தகவல் எங்களுக்கு தெரியவந்ததையடுத்து போலீசிலும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்துள்ளோம். இருப்பினும் தி.மு.க.வின் தில்லுமுல்லு அரவக்குறிச்சி மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×