search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீச்சு
    X

    தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீச்சு

    அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கரூர்:

    தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டது.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார்.

    அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று அவர் பிரசாரத்தை ரத்து செய்தார்.



    இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.

    பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பா.ஜ.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கட்சி நிர்வாகியும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான சினேகன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஒலிபெருக்கி மூலம், “உங்கள் கோபம் நியாயமானது. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நாங்களும், நீங்களும் ஒரே அணியில்தான் இருக்கிறோம். எனவே எங்கள் பணியை செய்ய விடுங்கள். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

    இதை ஏற்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “நாளை (அதாவது இன்று) சூலூர் செல்வதாக இருந்தது. பிரசாரத்திற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சட்டம்-ஒழுங்கு மீறப்படும் என்பது. நாங்கள் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் அல்ல என்பதற்கு எங்கள் கூட்டமே உதாரணம்” என்றார்.
    Next Story
    ×