search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது
    X

    கோவையில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

    • கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சத்திய பாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோவை கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார்.

    முன் பகை காரணமாக இந்த 2 கொலை சம்பவங்களும் அரங்கேறியது விசாரணையில் தெரியவந்தது. தொடர் கொலைகளை அடுத்து கோவை மாநகரில் உள்ள ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இதுவரை சுமார் 56-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் "பிரண்ட்ஸ் கால் மி தமன்னா" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்குமாறும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

    அதில் "எதிரி போட நினைத்தால், அவனை போடுவோம். ஓடுனா கால வெட்டுவோம்" என்ற வன்முறையை தூண்டும் பாடல் வரிகளுடன் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.

    மேலும் கோர்ட்டு அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த பெண் பின் தொடர்ந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா என்பதும், இவர் ஏற்கனவே கோவையில் கஞ்சா வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.

    கோவை மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் திருப்பூர், விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டு வினோதினி என்ற தமன்னாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடி வரும் நிலையிலும் கூட தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், தான் ஆயுதங்களுடன் இருப்பது போன்று வரும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அப்போது டிரெண்டிகிற்காக செய்யப்பட்டது தான் இந்த வீடியோக்கள். தற்போது நான் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. நான் 6 மாத கர்ப்பிணியாக, எனது கணவருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து தனிப்படையினர் அவரை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்றிரவு சேலம் சங்ககிரி விரைந்தனர்.

    பின்னர் அங்கிருந்த தமன்னாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×