என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 4-வது நாளாக காட்டாற்று வெள்ளம்
- வினாடிக்கு 52 ஆயிரத்து 465 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
- மீட்பு படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்,
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 52 ஆயிரத்து 465 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்து அடைகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது.
இதனால் இன்றுகாலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்தது.
வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வரத்து உள்ளதால், ஆலம்பாடி காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்ட வாறு பெருக்கெடுத்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இதன்காரணமாக ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் வெள்ளத்தில் மூழ்கியது. ஒகேனக்கல்லில் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடையானது இன்று 8-வது நாளாக தொ டர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
காவிரி ஆற்றில் 4-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழக-கர்நாடக எல்லை யான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.