search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல மொழிகளை கற்பது அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்- துணை ஜனாதிபதி பேச்சு
    X

    பல மொழிகளை கற்பது அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்- துணை ஜனாதிபதி பேச்சு

    • கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று.
    • இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சார்பில் கேளம்பாக்கம் அருகே காயார் கிராமத்தில் வேலூர் இன்டர்நேஷனல் பள்ளி (வி.ஐ.எஸ்.)தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பள்ளியின் திறப்பு விழா நடந்தது. வி.ஐ.டி. கல்விக்குழும தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. கல்விக்குழும துணைத்தலைவரும், வேலூர் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவருமான ஜி.வி.செல்வம் வரவேற்றார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    வேலூர் சர்வதேச பள்ளியில், குரு சிஷ்யா பரம்பரையின் ஆக்கப்பூர்வ அம்சங்களை தற்கால கற்கபித்தல் முறையோடு ஒருங்கிணைக்க, 'வீட்டு பெற்றோர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

    பள்ளிக் கல்வியில் தாய் மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம். பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

    இவ்வாறு பேசினார்.

    அதைதொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பள்ளியின் தலைவர் ஜி.வி.செல்வம் நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார்.

    விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை வாசித்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    வி.ஐ.எஸ். பள்ளியானது உறைவிடப் பள்ளி யாக திட்டமிடப்பட்டுள்ளது. வீடும், பள்ளியுமான இரட்டை நிலைகளையும் கொண்டதாக உள்ளது. வீடு என்பது அன்பையும் பண்பாட்டையும் உள்ளடக்கியது. பள்ளி என்பது அறிவையும் ஆற்றலையும் உள்ளடக்கியது. அத்தகைய அன்பையும், பண்பாட்டையும், அறிவையும், ஆற்றலையும் கற்றுத்தருவதாக இப்பள்ளிஅமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஜி.விசுவநாதன் கல்வி நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தினாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய நமது விழுமியங்களில் மாறா பற்றுகொண்டு அதற்கான தமிழியக்கத்தையும், தொடர்ந்து நடத்தி வருபவர் என்பதை இந்த நாடு அறியும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், தாய்மொழிப்பற்று, தமிழ்ப்பண்பாடு, அறிவுக்கூர்மை, தொண்டுள்ளம் ஆகியவையும் கொண்டவர்களாக தமிழக மாணவர் சமுதாயம் வளர தேவையான விழுமியங்களையும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

    வி.ஐ.டி. கல்விக் குழுமத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் பேசுகையில், "கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று.

    இந்த திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. தனியார் பங்களிப்பு என்பது கல்வியில் மிக அவசியம்" என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.ஐ.டி. துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்காவலர் அனுஷ செல்வம் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேமுதிக துணை செயலாளர் எல். கே.சுதீஷ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதி டி.என்.வள்ளிநாயகம், வேல்ஸ் கல்விக்குழும தலைவர் ஐசரிவேலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஆர். எல்.இதயவர்மன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து காண்டனர். பள்ளி இயக்குனர் சஞ்சீவி நன்றி கூறினார்.

    சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் வி.ஐ.எஸ். எனப்படும் வேலூர் இன்டர் நேஷனல் உறைவிட பள்ளியை இயற்கை சூழ்ந்த எழில்மிகு பகுதியில் மிக பிரமாண்டமாக அமைத்துள்ளது.

    இங்கு வெளிநாட்டு பள்ளிகளுக்கு இணையாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் (2022-2023) 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஐ.சி.எஸ்.இ. மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் கீழ் இங்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    Next Story
    ×