என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் புதிய பஸ் நிலைய கடைகளை ஏலம் எடுக்க ஆள் இல்லை
- 75-ல் 8 கடைகள் மட்டுமே எடுக்கப்பட்டது
- கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
75 கடைகள் ஏலம்
அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில கடைகள், ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மீதமுள்ள 75 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்தனர்.பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே 4 தடவைக்கு மேல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆள் இல்லை
ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இன்று நடந்த ஏலத்தில் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடைகள் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மனுக்கள் போடுவதற்காக மாநகராட்சி வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது அதில் 13 பேர் கடை வாடகை உள்ளிட்ட விவரங்களை பெட்டியில் போட்டனர். ஒருவர் மட்டும் நேரடியாக ஏலத்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள 8 கடைகள் இன்று ஏலம் விடப்பட்டன.
கடைகள் ஏலம் நடைபெறுவதை ஒட்டி மாநகராட்சி வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.